'நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.. நிதியும் வழங்கமாட்டோம்" அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகளுக்கு நிதி வழங்கப்படாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் சபைகளில் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும், அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நிதி வழங்கி வைக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறுகூறியுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஒன்று, இரண்டு, மூன்று என ஆசனங்களைபெற்றவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை.
குறிப்பாக நாட்டில் தமது வருமானத்தின் ஊடாக தமது பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்யக்கூடிய 15 வரையிலான உள்ளூராட்சி சபைகளே இருக்கலாம்.
மற்றைய சகல உள்ளூராட்சி சபைகளும் அரசாங்கத்தின் நிதியிலேயே இயங்குகின்றன. மத்திய அரசாங்கத்தின் நிதி அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்காக எப்படியும் வழங்கப்படும். யார் ஆட்சி செய்தாலும் அது கொடுக்கப்படும்.

ஆனால் மற்றைய அபிவிருத்தி நடவடிக்கைகள் அரசாங்க கட்சியுடனான தொடர்புகள், அரசாங்க கட்சியுடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் திறமைகளுக்கு அமையவே தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களே இருக்கின்றனர்.
இதனால் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சி செய்யமுயற்சித்தால் அந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கள் நிச்சயமாக பலவீனமடையும்.

அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும் நாட்டையும் தின்று கிராமங்களையும் தின்ற அரசியல்வாதிகளுக்கு மேலதிகமாக நிதி வழங்குமளவுக்கு நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. அவ்வாறான மக்கள் ஆணை எங்களுக்கு வழங்கப்படவில்லை. திருடர்களுக்கு உதவ வேண்டாம் என்ற ஆணையே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சூழ்ச்சியான வகையில் சபைகளை அமைக்க இடமளிக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.